பொந்தியான், அக்டோபர் 12 :
நேற்று, இங்குள்ள புக்கிட் பத்து, ஜாலான் ஆயிர் பலோய் என்ற இடத்தில் 18 வயது வாலிபர் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் நான்கு சைக்கிள் ஓட்டிகள் காயமடைந்தனர்.
மாலை 6.11 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், ஹோண்டா ஆர்எஸ் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரும் காயமடைந்ததாக பொந்தியான் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முஹமட் ஷோபி தாயிப் தெரிவித்தார்.
“முதற்கட்ட விசாரணையின்படி, 31 முதல் 60 வயதுக்குட்பட்ட நான்கு சைக்கிள் ஓட்டிகள் புக்கிட் பத்து திசையிலிருந்து ஆயிர் பலோய் பொந்தியான் நோக்கிப் பயணம் செய்தனர். சம்பந்தப்பட்ட அனைத்து சைக்கிள்களிலும் விளக்குகள் எரிந்திருந்த. சம்பவ இடத்திற்கு வந்தபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது.
இச்சம்பவத்தின் விளைவாக, 4 சைக்கிள் ஓட்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளாகி, ஆயிர் பலோய் சுகாதார மருத்துவமனையில் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.
சம்பவத்தின் போது லேசான மழையுடன் வழுக்கும் சாலையாக இருந்ததாகவும் வானிலை மங்கலாகவும் இருந்தது என்று முஹமட் ஷோபி கூறினார்.
விசாரணையின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை,” என்று கண்டறியப்பட்டதாகவும் இவ்வழக்கு விதி 10 LN 166/59 இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.