புத்ராஜெயா, அக்டோபர் 14 :
சரவாக் கிராமப்புற பள்ளிகளுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரத்தைப் பெறும் RM1.25 பில்லியன் மதிப்புள்ள திட்டத்தில் லஞ்சம் பெற்றதற்காக ரோஸ்மாவை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அந்த தண்டனை ரத்து செய்யக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் 127 காரணங்களை ரோஸ்மா மன்சோர் தரப்பு பட்டியலிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவியான ரோஸ்மா, நேற்று Messrs Akberdin & Co மூலம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவிலேயே இந்த 127 ஆதாரங்களை பட்டியலிடப்பட்டுள்ளன.
அவர் பட்டியலிட்ட காரணங்களில், விசாரணை நீதிபதி முகமட் ஜைனி மஸ்லான் தனது முடிவில் தவறிழைத்ததாகவும், ஆவணங்களை தவறாக கையாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி முகமது ஜைனி தன்னை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கும் தீர்ப்பை மூன்றாம் தரப்பினர் தயாரித்ததாக கூறி விசாரணையில் இருந்து விலக மறுத்ததில் தவறு இருப்பதாகவும் அவரது தரப்பு தனித்தனியாக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
மேலும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் வரை ரோஸ்மா தண்டனையை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று மேல்முறையீடு செய்யப்படத்தைத் தொடர்ந்து, தற்போது ரோஸ்மா ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.