ஈப்போ, அக்டோபர் 18 :
தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 265.6 இல் அவர்கள் சென்ற கார் சறுக்கி, வாய்க்காலில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியதாக, மேரு ராயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், ஷாருதி முகமட் ஹலீல் தெரிவித்தார்.
தோயோத்தா சியன்டா வகை கார் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து பிற்பகல் 2.51 மணிக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது, கணவன், மனைவி மற்றும் அவர்களது மூன்று மகன்கள் பயணித்த கார், சாலையின் இடது பக்கத்திலுள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது தெரிய வந்தது.
“அவர்களின் 21 வயது மகனுக்கு வலது கால் முறிந்தது, ஏனையவர்கள் சிறிய காயத்துடன் உயிர் பிழைத்தனர், பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்களால் வாகனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்,” என்று அவர் இன்று இங்கு தொடர்பு கொண்டபோது கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் மேல் நடவடிக்கைக்காக மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார். பிற்பகல் 3.47 மணிக்கு மீட்பு நடவடிக்கை முடிந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.