ஷா ஆலாம், அக்டோபர் 21 :
இன்று அதிகாலை கிள்ளான், கம்போங் சுங்கை பினாங், ஜாலான் ஷாபாடு என்ற இடத்தில் எரிந்த நிலையிலிருந்த ஒரு பெரோடுவா கான்சில் காரில், அடையாளம் தெரியாத நபரின் உடல் முற்றாக எரிந்து கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
ஓட்டுநரின் இருக்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர் தொடர்பில், இதுவரை எந்த அடையாளமும் கண்டறியப்படவில்லை என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோராஸாம் காமிஸ் தெரிவித்தார்.
சுங்கை பினாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் குழு ஒன்று காலை 5.27 மணிக்கு அவசர அழைப்பு வந்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
“10 நிமிடங்களுக்குப் பிறகு வந்து பார்த்தபோது, தீ விபத்துக்குள்ளானதாக நம்பப்படும் ஒரு Perodua Kancil கார் (பதிவு எண் BGN 5095) 100 விழுக்காடு எரிந்திருந்தது என்றும் ஒரு கருகிய மனித உடல் ஓட்டுநர் இருக்கையில் இருந்தது,” என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.