பாடாங் தெராப், அக்டோபர் 24 :
பாடாங் தெராப் பெர்சாத்து பிரிவுத் தலைவர் டத்தோ சையட் சோப்ரி சையத் ஹாஷிம் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
மேலும் பாடாங் தெராப் பிரிவைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட பெர்சாத்து உறுப்பினர்களும், பாடாங் தெராப் பிரிவில் உள்ள பல கிளைகளின் நான்கு தலைவர்கள் மற்றும் குழு உறுப்பினர்களும் (AJK) கட்சியை விட்டு வெளியேறுவதாக இன்று இங்கு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
மக்களுக்காகப் போராடுவதை விட வாய்ச்சவடால் செய்ப்பவர்களே மேன்மைப் படுத்தப்படுகிறார்கள், அத்தோடு தங்கள் நலன்களை மட்டுமே கவனிக்கும் கட்சியின் உயர்மட்டத் தலைமையின் மீது தாம் நம்பிக்கை இழந்ததே இந்த முடிவிற்கு காரணம் என்று சையட் சோப்ரி கூறினார்.
2008 முதல் 2013 வரை பாரிசான் நேஷனல் (பிஎன்) பிரதிநிதியாக கோலா நெராங் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சையட் சோப்ரி, 15வது பொதுத் தேர்தலுக்கு (GE15) முன்னதாக கட்சியை விட்டு வெளியேறியதற்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.