புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமை விரைவில் சிங்கப்பூருக்கு வருமாறு பிரதமர் லீ சியென் லூங் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் அன்வாரை விரைவில் சிங்கப்பூர் வருமாறு அழைத்தேன். எங்கள் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த அவருடனும் புதிய அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று லீ தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
10ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள அன்வாருக்கு வாழ்த்து தெரிவிக்க இன்று அவரிடம் பேசியதாக தெரிவித்தார். எனக்கு பல தசாப்தங்களாக டத்தோஸ்ரீ அன்வாரை தெரியும். சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து 2018 இல் சிங்கப்பூரில் நடந்த உச்சிமாநாட்டில் அன்வார் விரிவுரை ஆற்றியபோது இருவரும் சந்தித்ததை நினைவுகூர்ந்தார் .
உண்மையில், சிங்கப்பூரும் மலேசியாவும் நெருங்கிய நண்பர்கள். வலுவான வரலாற்று, கலாச்சார மற்றும் தனிப்பட்ட உறவுகளால் நீண்டகால நட்பைப் பகிர்ந்து கொள்கின்றன. பரஸ்பர நன்மைக்காக இருதரப்பு உறவை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் நேற்று இஸ்தானா நெகாராவில் புதிய பிரதமராக பதவியேற்ற பிறகு, லீ வாழ்த்துக் கடிதமும் எழுதியிருந்தார் .










