மலாக்கா, டிசம்பர் 5 :
மலேசியாவில் ஆண்டுதோறும் 20,000க்கும் மேற்பட்ட புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள் என்று மலேசியாவின் தேசிய புற்றுநோய் சங்கத்தின் (NCSM) நிர்வாக இயக்குநர் டாக்டர் எம். முரளிதரன் தெரிவித்துள்ளார்.
சராசரியாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களே புற்றுநோய்க்கு இலக்காவதாகாவும், ஆனால்
கடந்த இரண்டு ஆண்டுகளில், 20 வயது முதல் 30 வயதிற்கு இடைப்பட்ட வயதுடைய புதிய புற்றுநோயாளிகள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
புற்றுநோய் கண்டறியப்பட்ட நபர்களின் வயது இப்போது மிக இளமையாக உள்ளது. அத்தோடு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது என்றார். இந்நிலை மிகவும் கவலையளிப்பதாக அவர் மேலும் கூறினார்.
ஆண்களைப் பொறுத்தவரை, 10 வகையான புற்றுநோய்கள் பெரும்பாலும் அவர்களைப் பாதிக்கின்றன, அவற்றில் மிக அதிக எண்ணிக்கையில் பதிவானது குடல் புற்றுநோயாகும், அதைத் தொடர்ந்து நுரையீரல், புரோஸ்டேட், லிம்போமா, நாசோபார்னக்ஸ், கல்லீரல், லுகேமியா, வயிறு, தோல் மற்றும் சிறுநீர்ப்பை புற்று நோய் என்பனவும் கண்டறியப்பட்டதாக, நேற்று இரவு நடந்த Life (RFL)-Luminaria 2022 நிகழ்ச்சியின் பின் செய்தியாளர்களிடம் கூறினார்.
NCSM ஆல் ஏற்பாடு செய்யப்பட்டு, புற்றுநோயாளிகளுக்கு ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியை, மாநில சுகாதாரம் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்புக் குழுவின் தலைவர் டாக்டர் முகமட் அக்மல் சாலே ஆரம்பித்து வைத்தார்.
பெண்களுக்கான புற்று நோய்களில் பெருங்குடல் அல்லது குடல், கற்பப்பை வாய், நுரையீரல், கருப்பை, கார்பஸ் கருப்பை, லிம்போமா, தைராய்டு, லுகேமியா மற்றும் தோல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது என்று முரளிதரன் கூறினார்.
எவ்வாறாயினும், சமீப ஆண்டுகளில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது, பள்ளி மாணவர்களுக்கு, குறிப்பாக 13 வயதுக்குட்பட்ட பதின்ம வயது பெண்கள் மத்தியில், மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியின் பயன்பாடு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் கூறினார்.