கிளாந்தானில் வெள்ள நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதனால் பாசீர் மாஸில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களுக்கு குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில், கிளாந்தான் குடிமைத் தற்காப்புப் படையின் சுமார் 100 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை முதல் கடமையில் ஈடுபட்டுள்ளனர், என்று கிளாந்தான் ஏபிஎம் இயக்குனர் கர்னல் (பிஏ) முகமட் அட்சார் முஜாப் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் தும்பாட் மற்றும் தானா மேரா மாவட்டங்களில் இருந்தும் பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது, பாசீர் மாஸ், குறிப்பாக ரந்தாவ் பாஞ்சாங் மட்டுமே கடந்த மூன்று நாட்களாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று ரெபெக், கம்போங் செரோங்காவில் வெள்ள நிலைமையை ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறினார்.
“பாசீர் மாஸில் வெள்ள நிலைமை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்றும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாது என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் கூறினார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் கிளாந்தான் குடிமைத் தற்காப்புப் படை 24 மணி நேரமும் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.