காரில் இருந்த பொட்டலம் வெடித்ததில், சமையல்காரர் மரணம்

அம்பாங் ஜெயா:

ஜாலான் பாண்டான் இன்டா 12/1, பாண்டான் இன்டாவில் உள்ள ஒரு உணவகம் அருகே, காரின் போனட்டில் கிடந்த பொட்டலம் வெடித்ததில், சமையல்காரர் ஒருவர் உயிரிழந்ததாக, அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபாரூக் எஷாக் தெரிவித்தார்.

நேற்றிரவு 8.55 மணியளவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பில், வெடி விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் ஒருவரிடமிருந்து காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்தது.

“பாதிக்கப்பட்ட, 28 வயதான உள்ளூர் ஆடவர், அவர் வேலைசெய்து வந்த உணவகத்திற்கு அருகே தோயோத்தா கொரோலா ஆல்டிஸ் வகை காரின் போனட்டில் ஒரு பொட்டலம் கிடந்ததைக் கண்டார். அதை அவர் வைத்திருந்தபோது, ​​வெடிப்பு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது” என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“வெடிப்பினால் உடல் மற்றும் கைகளில் பலத்த காயம் அடைந்த குறித்த ஆடவரை பொதுமக்கள் அம்பாங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் பாதிக்கப்பட்டவர் நேற்று இரவு 9.45 மணிக்கு அம்பாங் மருத்துவமனையில் இறந்தது உறுதி செய்யப்பட்டதாகவும்” முகமட் ஃபாரூக் கூறினார்.

சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் கொலைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here