பெய்ஜிங்:
சீனாவில் கோவிட் -19 தொற்றுநோயின் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் சீன பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி வருகின்றன.
இந்த நிலையில் சீன பயணிகளுக்கு அமெரிக்காவிலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துவருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலையை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பில் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில்,” சீனாவில் கொரோனா பரவலின் எழுச்சியால் உலக சுகாதார அமைப்பு கவலை கொண்டுள்ளது. சீனாவில் தொற்று பரவலை கருத்தில் கொண்டு சில நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ள கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
எனினும், தொற்றுநோய் நிலைமை குறித்து விளக்க சீனா இன்னும் முன்வர வேண்டும். சீனாவில் தற்போதை தொற்று பரவல் பற்றிய விரிவான தகவல்கள் எங்களுக்கு தேவை. கண்காணிக்கவும், அதிக ஆபத்துள்ளவர்களுக்கு தடுப்பூசி போடவும் சீனாவை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்.
மருத்துவ பராமரிப்பு மற்றும் அதன் சுகாதார அமைப்பைப் பாதுகாப்பதற்கான எங்கள் ஆதரவை நாங்கள் சீனாவுக்கு தொடர்ந்து வழங்குகிறோம்” என்று அவர் கூறினார்.