புத்ராஜெயா:
இந்தோனேசியாவின் பாலியில் கடலில் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்த, மலேசிய சுற்றுலா பயணியின் உடல் நேற்று இரவு 10.15 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை (KLIA) வந்தடைந்தது.
கடந்த டிசம்பர் 27ஆம் தேதி, பிற்பகல் 2.50 மணியளவில் நுசா பெனிடா தீவில் உள்ள டயமண்ட் கடற்கரையில் நடந்த சம்பவத்தின் போது, பெரிய அலைகள் மற்றும் வலுவான நீரோட்டங்கள் காரணமாக கடலில் சிக்கி, போராடிக்கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பாதிக்கப்பட்டவர் காப்பாற்ற முயன்றதாக கூறப்படுகிறது.
அனால் துரதிஷ்டவசமாக பாதிக்கப்பட்டவர் பலத்த நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்பட்டதாகவும், மறுநாள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மலேசிய வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா) நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அமைச்சகம் தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், இந்த கடினமான காலங்களில் குடும்பத்தினர் நம்பிக்கை மற்றும் உறுதியுடன் இருப்பார்கள் என்று நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.