தெலுக் இந்தான் :
தெலுக் இந்தான் மருத்துவமனையில் காசநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த உள்ளூர் ஆடவர் ஒருவர், மருத்துவமனைக் கட்டடத்திலிருந்து குதித்து மரணடைந்ததாக ஹிலிர் பேராக் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஹ்மட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, இன்று அதிகாலை 3:30 மணியளவில், குறித்தா சம்பவம் தொடர்பில் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாகவும், சம்பவ இடத்தில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், இறந்தவர் சீன வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர், 43 வயதானவர் என்றும் அவர் திருமணம் செய்யாது தனியாக இருப்பதாகவும், கடந்த டிசம்பர் 31 அன்று காசநோய்ச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது என்னு கூறினார்.
“சம்பவம் நடந்தபோது, அவர் காசநோய்க்கான சிறப்பு வார்டில் தனியாக இருந்தார் என்றும் அவர் வார்டின் ஜன்னல் கண்ணாடிகளை அகற்றிவிட்டு கீழே விழுந்தார் என்றும் தெரியவந்தது, ”என்று அவர் கூறினார்.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில், குறித்த ஆடவரது வலது கையில் எலும்பு முறிவு மற்றும் மார்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இறந்தவர் தனது உடல்நிலை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டது, மேலும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று பஸ்ரி கூறினார்.