கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்தின் பொதிகள் பெறுதல் மற்றும் விநியோக மையத்தில், சமீபத்தில் வந்த மூன்று பொதிகளில் RM221,616 மதிப்புள்ள 6.156 கிலோகிராம் சியாபு அல்லது மெத்தாம்பேட்டமைனை சபா சுங்கத் திணைக்களம் கைப்பற்றியதுடன், இருவரையும் கைது செய்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி விமான நிலையத்தின் ஏவியேஷன் போஸ்டில் ஸ்கேனிங் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சோதனையில், ஆபத்தான போதைப்பொருள் அடங்கிய பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சபா சுங்கத்துறையின் துணை இயக்குநர் முகமட் நசீர் டெராமன் தெரிவித்தார்.
” அதன்பின்னர், ஜனவரி 3 ஆம் தேதி நண்பகல் 12.55 மணியளவில், பொதிகளில் ஒன்றை உரிமை கோருவதற்காக குறித்த மையத்திற்கு வந்த, 28 மற்றும் 30 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
உரிமை கோரப்படாத மற்ற இரண்டு பொதிகளிலும் RM110,556 மதிப்புள்ள 3.071 கிலோ போதைப்பொருள் இருந்ததாகவும், அதனுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முகமட் நசீர் கூறினார்.
இந்த வழக்குகள் 1952 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் பிரிவு 39B (1) (a) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றன, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.