கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையின் (LPT) கிழக்கு நோக்கிய 240.6 ஆவது கிலோமீட்டரில், வாகனம் விபத்துக்குள்ளாகியதில் அம்னோ மகளிர் பிரிவு உறுப்பினர்கள் மற்றும் புத்திரி பிரதிநிதிகள் உள்ளிட்ட மொத்தம் 9 பேர் காயமடைந்தனர்.
நேற்று கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் (WTCKL) நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான அம்னோ பொதுப்பேரவையில் கலந்து கொண்டு, மீண்டும் அவர்கள் திரெங்கானுவில் உள்ள கெமாமன் நகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, மாலை 5.50 மணியளவில் இந்த விபத்து நடந்தது என்று, குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் வான் முகமட் ஜஹாரி வான் புசு கூறினார்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், 37 வயது ஆடவர் ஓட்டிச் சென்ற தோயோத்தா ஹைஸ் வேன் ஒன்பது பெண் பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து கெமாமனுக்கு ஏற்றிச் சென்றது கண்டறியப்பட்டது.
“சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தபோது, முன்னால் வந்த கார் திடீரென பிரேக் போட்டதால், சம்பந்தப்பட்ட வேன் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளானது” என்று அவர் இன்று, வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த அனைவரும் தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு (HTAA) அனுப்பப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.