தெமெர்லோ தெற்கு நோக்கிய சாலையின் ஓய்வெடுக்கும் (R&R) பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு லோரியை சோதனை செய்ததில், 20 இலட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள சிகரெட்டுகள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக, பகாங் சுங்கத்துறை இயக்குனர், வான் அபாண்டி வான் ஹாசன் தெரிவித்தார்.
இது பகாங்கின் மிகப்பெரிய கடத்தல் முயற்சிகளில் ஒன்றாகும் என்று கூறிய அவர், கடந்த ஜனவரி 5 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் R&R இல் நிறுத்தப்பட்டிருந்த லோரியில் இருந்து கடத்தப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும், அவை நாட்டிற்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அதன் வரி மதிப்பு RM258,800 என்றும் கடத்தப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 19 இலட்சம் ரிங்கிட் என்றும் அவர் கூறினார்.
“சோதனையைத் தொடர்ந்து, குறித்த லோரியின் ஓட்டுநர் என்று நம்பப்படும் 56 வயதான உள்ளூர் மனிதர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டார்” என்று வான் அபாண்டி கூறினார்.
மேலும் கிழக்கு மாநிலத்தில் இருந்து கோலாலம்பூருக்கு குறித்த லோரி சென்றதாக நம்பப்படுவதாகவும், இந்த கடத்தல் சிகரெட்டுகளை நாட்டின் எல்லை ஊடாக நாட்டிற்குள் கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது என்றும், இந்த வழக்கு விசாரணைகள் சுங்கச் சட்டம் 1967ன் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.