கடந்த சனிக்கிழமை (ஜனவரி 28) கோய் நகருக்கு அருகே (தெஹ்ரானில் இருந்து 780 கிலோமீட்டர் வடக்கே) வடமேற்கு ஈரானைத் தாக்கிய 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா) இன்று (பிப்ரவரி 1) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில், குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெஹ்ரானில் உள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும், அந்நாட்டு அரசுக்கும் மலேசியா தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அங்கு நில அதிர்வுகள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஈரானில் உள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் கூறப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள மலேசியர்கள் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு மலேசிய தூதரகத்தின் தொலைபேசி இலக்கம் (+9821) 8807 2444 அல்லது (+9821) 8807 8606 அல்லது mwtehran@kln.gov.my என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.