ஜோகூர் பாருவில் இல்லத்தரசி ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து அவருக்குத் தெரியாமல் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதால், அவர் RM34,000 சேமிப்பை இழந்துள்ளார்.
லாய் என்று மட்டுமே அறியப்படும் 58 வயதான பாதிக்கப்பட்ட பெண், கடந்த ஆண்டு டிசம்பர் 29 அன்று இணைய பணப் பரிவர்த்தனை செய்ய விரும்பியபோது, தனது வங்கிக் கணக்கில் RM20 மட்டுமே மீதம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார்.
“தான் உடனடியாக தாமான் ஜோகூர் ஜெயாவில் உள்ள வங்கிக்குச் சென்று சரிபார்த்ததாகவும், டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 28 ஆகிய தேதிகளில் ஆறு பரிவர்த்தனைகளின் மூலமாக, ஐந்து வெவ்வேறு கணக்குகளுக்கு தனது பணம் மாற்றப்பட்டதைக் கண்டுபிடித்ததாகவும்” அவர் கூறினார்.
“பரிமாற்றம் செய்யப்பட்ட தொகை ஒவ்வொரு கணக்கிற்கும் வேறுபட்டது, மொத்த தொகை RM34,299 என்றும், பணத்தினை பெறுபவர்கள் யார் என்று தனக்குத் தெரியவில்லை அல்லது அவர்களுக்கு இதற்கு முன்பு எந்த பணத்தையும் பரிமாற்றம் செய்யவில்லை,” என்று அந்த பெண் கூறியதாக ஜோகூர் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் லியோவ் காய் துங், இன்று செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
குறித்த பெண் போலீஸ் புகாரை பதிவு செய்துள்ளதுடன், அடுத்த வாரத்தில் பேங்க் நெகாராவிலும் புகார் அளித்ததாக அவர் கூறினார்.
“பரிவர்த்தனைகளுக்கு கடவுச்சொல் (OTP) அனுப்பப்பட்டதாக வங்கி கூறியதால், இந்த பரிவர்த்தனைக்கு வங்கி எந்தப் பொறுப்பையும் ஏற்க மறுக்கிறது, ஆனால் குறித்த பெண் தான் எந்த கடவுச்சொல்லையும் (OTP) பெறவில்லை என்கிறார்.
மேலும் தனது ஸ்மார்ட்போனில் தேவையற்ற ஆப்ஸ் எதையும் பதிவிறக்கம் செய்யவில்லை என்றும், சந்தேகத்திற்கு இடமான இணைப்புகளை கிளிக் செய்யவில்லை என்றும் குறித்த பெண்மணி கூறியதாக லியோவ் கூறினார்.