நேற்று இரவு, அலோர் காஜா அருகேயுள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் ( PLUS) 222 ஆவது கிலோமீட்டரில் உயிருள்ள கோழிகளை ஏற்றிச் சென்ற லோரி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில், கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறித்த லோரி சாலையின் இடது மற்றும் நடுப் பாதைகளில் கவிழ்ந்திருந்ததன் காரணமாக, அவ்வழிகள் அடைக்கப்பட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று, அலோர் காஜா மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அர்ஷத் அபு தெரிவித்தார்.
ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், உயிருள்ள கோழி ஏற்றிச் சென்ற லோரியின் இடதுபுறப் பின்பக்க டயர் திடீரென வெடித்ததால், லோரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி, சாலையில் கவிழ்ந்தது, இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
“இரவு 8.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 44 வயதான லோரி ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் இந்த வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 43 (1)ன் படி விசாரிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.