நாட்டில் வழக்கிலுள்ள கட்டாய மரண தண்டனையை ஒழிப்பது தொடர்பான மசோதா அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக தாக்கல் செய்யப்படும் என்று, சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறையின் துணை அமைச்சர், ராம்கர்பால் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா ஏப்ரல் மாதத்தில் நிறைவேற்றப்பட்டு, மே மாதத்திற்குள் அரசிதழில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
“இது அரசிதழில் வெளியிடப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் (தண்டனை விதிக்கப்பட்டவர்கள்) வழக்கறிஞர்கள் மற்றும் சிறைத்துறையின் உதவியுடன் கூட்டரசு நீதிமன்றத்தில் தங்கள் விண்ணப்பத்தை (மசோதாவின் கீழ் உள்ள விதிகளைப் பயன்படுத்த) தாக்கல் செய்யலாம்,” என்று அவர் நேற்று காஜாங் சிறைக்குச் சென்ற பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த மசோதா அரசிதழில் வெளியிடப்படும் போது, இதுவரை தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மொத்தம் 1,320 கைதிகள் குறித்த மசோதாவின் கீழ் உள்ள சரத்துக்களின் அடிப்படையில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாகின்றனர். மேலும் இவ்வாறு செய்யப்படும் விண்ணப்பம் நீதிமன்ற நடைமுறைகள் மூலம் செல்லும் என்றும், தண்டனைகள் தானாக குறைக்கப்படாது என்றும் அவர் கூறினார்.