கோலா பெராங்: இன்று காலை 10.05 மணியளவில், இங்குள்ள கம்போங் காங் அருகே உள்ள திரெங்கானு ஆற்றில், மணல் உறிஞ்சும் இயந்திரத்தின் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக, உலு திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் ஹஸ்மேரா ஹாசன் கூறினார்.
“குறித்த சடலம் அழுகிய நிலையில் உள்ளதை வைத்து பார்க்கும்போது, அவர் இறந்து பல நாட்களாகியிருக்கும் என நம்பப்படுகிறது. மேலும் இறந்தவரின் உடல் முழுவதுமாக ஆடை அணிந்துள்ளது என்றும், ஆனால் அவர் சம்பந்தப்பட்ட அடையாள ஆவணங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
வெளிப்புற பரிசோதனையின் அடிப்படையில், சடலத்தில் காயம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், உடல் பிரேத பரிசோதனைக்காக உலு தெரெங்கானு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஹஸ்மேரா கூறினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று, அவர் மேலும் கூறினார்.








