ஜன விபாவா திட்டம் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக “டத்தோ ராய்” என்று அழைக்கப்படும் முகமட் ஹுசைன் முகமட் நசீர் என்பவருக்கு, இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) தொடங்கி வியாழன் (மார்ச் 16) வரை மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு வழங்கபட்டுள்ளது.
MACC சட்டம் 2009 இன் பிரிவு 17(a) இன் கீழ், 54 வயதான “டத்தோ ராய்”க்கு எதிராக மாவட்ட நீதிமன்ற நீதிபதி நூரேலின்னா ஹனிம் அப்துல் ஹலீம் குறித்த உத்தரவைப் பிறப்பித்தார்.
முகமட் ஹுசைனை ஏழு நாள் காவலில் வைக்க மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி) விண்ணப்பித்ததாகவும், ஆனால் உறுதியான ஆதாரம் இல்லாததால் அவரது வழக்கறிஞர் ஃபஹ்மி அப்துல் மொயின் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அதற்கு பதிலாக மூன்று நாள் தடுப்புக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
நேற்று திங்கட்கிழமை (மார்ச் 13), முகமட் ஹுசைன் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திடம் சரணடைந்தார் பின்னர், அவர் கைது செய்யப்பட்டு, இன்று நிதிமன்றத்தில் தடுப்புக் காவல் உத்தரவை பெறுவதற்காக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.