ஜாலான் சையட் புத்ரா, புக்கிட் செபுத்தேவில் இன்று அதிகாலை கார் ஒன்று கிரேன் மீது மோதியதில் மூவர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாலை 3.46 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக, கோலாலம்பூரில் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“உடனே, ஹங் துவா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து மூன்று இயந்திரங்களுடன் மொத்தம் 10 உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.
“சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தபோது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேனின் பின்புறத்தில் கார் மோதியதில் விபத்து ஏற்பட்டதைக் கண்டறிந்தோம்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் காரின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்டார். ஏனைய இருவர் கிரேனைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் ஆவர்.
பாதிக்கப்பட்ட மூன்று பேரும் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்ததாக அங்கு வந்த சுகாதாரத்துறையினர் உறுதிப்படுத்தினர். அத்தோடு “உயிரிழந்தவர்களின் சடலங்கள் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன,” என்று அவர்மேலும் கூறினார்.