தற்போது காஜாங் சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், அரச மன்னிப்பைப் பெறுவாரா இல்லையா என்பது மாட்சிமை தங்கிய பேரரசரின் கைகளில் உள்ளது என்று டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் தெரிவித்துள்ளார்.
நஜிப் விடுதலையாவதற்கு சாத்தியமாக இருந்த அனைத்து சட்ட வழிகளிலும் முயற்சி செய்து, அவை தீர்ந்துவிட்டதால் அம்னோவுக்கு இனி செய்யவதற்கு எந்த சட்டமுயற்சியும் இல்லை என்றும், இறுதி முடிவு மாமன்னரின் விருப்பத்தின் அடிப்படையில் அமையும் என்று, பிரதமர் துறையின் சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தத்திற்கான அமைச்சருமான அவர் கூறினார்.
கடந்த ஏப்ரல் 7 அன்று, நஜிப்பிற்கு அரச மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு மாமன்னரிடம் அம்னோ வேண்டுகோள் விடுப்பதாக, அம்னோ பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் அசிரஃப் வாஜ்டி டுசுகி கூறியிருந்தார்.
ஆனால் திங்களன்று (ஏப்ரல் 10) நஜிப் சார்பாக மேல்முறையீடு செய்வதற்கு அம்னோவுக்கு சட்டப்பூர்வ தகுதி இல்லை என்று பிரதமர் துறையின் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் கூறியது பலதரப்பினரிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.









