நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலைகாரணமாக தீ விபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ள காடுகளை திரெங்கானு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நெருக்கமாக கண்காணித்து வருகிறது.
நேற்று அதிகாலை இங்கிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெராங், செத்தியூ என்ற இடத்தில் உள்ள 5 ஹெக்டேர் காட்டில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்த பின்னர், அதன் செயல்பாட்டுத் தளபதி முகமட் மசிமி முகமட் இதனைத் தெரிவித்தார்.
“நாங்கள் இப்போது வெற்றிகரமாக தீயை அணைத்திருந்தாலும், தற்போது நிலவும் மிகவும் வெப்பமான வானிலை காரணமாக வனப்பகுதியை தொடர்ந்து கண்காணிப்போம். நாங்கள் மற்ற காடுகளிலும் கண்காணிப்பைச் செய்வோம், ஏனெனில் அங்கும் வெப்பமான காலத்தின் போது தீ எப்போதும் வெடிக்கும்,” என்று அவர் கூறினார்.
மெராங் காட்டுத் தீயை அணைக்கும் நடவடிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு முடிவடைந்ததாக முகமட் மசிமி கூறினார்.
இதில் செத்தியூ, கோலா நெராஸ், ஜாலான் கோத்தா, வகாஃப் தாபாய் மற்றும் பெசூட் தீயணைப்பு நிலையங்களில் இருந்து மொத்தம் 35 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் என்றார்.
மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.








