மலாக்காவை சுற்றி நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு சோதனைகளில் ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 12 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
காலை 10.40 மணியளவில் தாமான் செங் பெர்டானாவில் உள்ள ஒரு வீட்டில் நடந்த முதல் சோதனையில், 18 முதல் 24 வயதுடைய எட்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்கிய 11 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஜைனோல் சமா தெரிவித்தார்.
ஆன்லைனில் மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சந்தேகிக்கப்படும் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறி 15 வயது சிறுவன் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஒரு வருடமாக செயல்பட்டு வரும் கும்பல் கெடா, சிலாங்கூர்,மலாக்கா, தெரெங்கானு, சரவாக், பெர்லிஸ் மற்றும் பேராக் ஆகிய இடங்களில் 12 ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது, இதன் விளைவாக மொத்தம் RM65,000 இழப்பு ஏற்பட்டது.
கும்பல் இந்த வளாகத்தை மாதம் 4,000 ரிங்கிட் வாடகைக்கு எடுத்து வருவதாகவும், கடந்த மாதம் முதல் அதை தங்கள் இயக்க மையமாக பயன்படுத்துவதாகவும் ஜைனோல் கூறினார். மற்ற மாநிலங்களில் நடந்த மோசடிகள் தொடர்பாக நான்கு பேருக்கும் தலா இரண்டு முந்தைய தண்டனைகள் இருந்ததாகவும், சோதனையின் போது RM17,000 மதிப்புள்ள பல்வேறு பொருட்களை போலீசார் கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.
பிற்பகல் 1.15 மணிக்கு நடந்த இரண்டாவது சோதனையில், ஆன்லைன் மோசடி மையத்தின் மேலாளர் என்று நம்பப்படும் ‘ஆ பாய்’ என்று அழைக்கப்படும் 25 வயது நபர் இங்குள்ள சிம்பாங் அம்பாட், அலோர் காஜாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே பிடிபட்டார் என்று ஜைனோல் கூறினார்.
அந்த நபர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, காரில் வைக்கப்பட்டிருந்த பையில் இருந்த 60,000 ரிங்கிட் லஞ்சமாக போலீசாரிடம் கொடுத்ததாக அவர் கூறினார்.
லஞ்சம் அவரையும் அவரது நண்பர்களையும் விடுவிக்க ஒரு தூண்டுதலாக இருந்தது. ஆனால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். மேலும் காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதற்காக மேலதிக விசாரணைக்காக பணம் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபரும் பணமும் மேல் நடவடிக்கைக்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420இன் கீழ் விசாரணைகளை எளிதாக்குவதற்காக சந்தேக நபர்கள் அனைவரும் இன்று முதல் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று ஜைனோல் கூறினார்.









