சிப்பாங்கிலுள்ள பாகன் லாலாங் கடற்கரையில் எட்டுப் பேருடன் சென்ற படகு நீரில் மூழ்கியதில், முதியவர் ஒருவரைக் காணவில்லை. ஏனைய 7 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இன்று சனிக்கிழமை (ஜூன் 10) பிற்பகல் 2.27 மணிக்கு குறித்த சம்பவம் தொடர்பில் தங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) முகமதுல் எஹ்சான் முகமட் ஜைன் கூறினார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், படகு சிப்பாங் கேச்சில் படகுத்துறையில் இருந்து புறப்பட்டு “கேலோங்” நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சம்பவம் நடந்ததாக அவர் கூறினார்.
“படகிலிருந்து ஏனைய ஏழு பேரை அருகில் இருந்த மீனவர்கள் மீட்டனர், ஆனால் படகு செலுத்திய முதியவரைக் காணவில்லை. காணாமல்போனவர் 67 வயதான ஆங் டோங் போ என அடையாளம் காணப்பட்டுள்ளார்,” என்று அவர் கூறினார்.
காணாமல்போன முதியவரைத் தேடும் பனி தொடர்வதாக அவர் மேலும் கூறினார்.









