கோத்தா கினாபாலு:
சலவைத் தூள் போல் மறைத்து, சுமார் 3.36 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சியாபுவை சபாவிற்கு கடத்த முயன்ற கும்பலின் முயற்சியை சுங்கத்துறையினர் முறியடித்துள்ளனர்.
குறித்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் 100 கிலோவிற்கும் அதிகமான போதை மருந்துகளை “Anchor” துணி துவைக்கும் சலவை தூள் போன்ற பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் வைத்து, அவற்றை போர்ட் கிளாங்கில் இருந்து சபா மாநிலத்தின் செபாங்கர் துறைமுகத்திற்கு ஒரு கொள்கலனில் அனுப்பியது.
கடந்த புதன் கிழமை (ஜூலை 26) கிடைத்த புலனாய்வுத் தகவலைத் தொடர்ந்து, குறித்த போதைப் பொருட்கள் அடங்கிய கண்டெய்னர், மாலை 5 மணிக்கு துறைமுகத்தில் இருந்து வெளியேறியபோது நிறுத்தப்பட்டது.
இந்த ஆண்டு சபாவில் சுங்கத் துறையிடம் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் இதுவாகும் என்று, சுங்கத்துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ஜாசுலி ஜோஹன் தெரிவித்தார்.
“101.9 கிலோ எடையுள்ள ரிங்கிட் 3,364,383 மதிப்புள்ள ஒன்பது பெட்டிகளில் போதைமருந்துகள் கொண்ட பாக்கெட்டுகளுடன் சோப்பு கலந்த உண்மையான பாக்கெட்டுகளும் இருந்தன. அமலாக்க அதிகாரிகளை ஏமாற்றுவதற்காகவே இது மேற்கொள்ளப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
யாரையும் கைது செய்யவில்லை என்றும், சரக்குகளை அனுப்பியவர் மற்றும் பெறுநரைக் கண்காணிக்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சாசுலி கூறினார்.
இந்த சரக்குகள் லிக்காஸில் உள்ள ஒரு குடியிருப்புக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படுகிறது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை வழங்குகிறது என்பது நினைவுகூரத்தக்கது.









