லுமுட்டில் வேலை முடிந்து ஈப்போவை நோக்கி பயணம் செய்த புரோதொன் சாகா ரகக் கார் தீபிடித்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்துகொண்டிருந்த 5 பேரில் 4 பேர் தீ விபத்தில் கருகி பலியாயினர். ஒருவர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.
இன்று மாலை 5.10 மணியளவில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 220 ஆவது கிலோமீட்டரில், சங்காட் செர்மின் டோல் சாவடி அருகே இச்சம்பவம் நிகழ்ந்தது. சம்பந்தப்பட்ட கார் 95 விழுக்காடு தீயில் அழிந்தது. அதில் பயணித்த 5 பேரும் மலேசியர்கள் என்பதோடு இறந்தவர்களில் 3 பேர் சீன ஆண்கள் என்றும் ஒரு இந்திய ஆண் என்றும் அறியப்படுகிறது. உயிர் பிழைத்தவர் சாரிப் முஹம்மட் பின் சிடேக் (54 வயது) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது என பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்ப்புபடை அதிகாரி முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
காயமுற்றவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காரினுள் எரிந்து கிடப்பவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது எனவும் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு வழங்கிய தகவலில் அவர் குறிப்பிட்டார்.