அலோர் ஸ்டார், அகஸ்ட்டு 12:
கெடா மாநிலத் தேர்தலில் தங்கள் பெயர்களை மற்றவர்கள் பயன்படுத்தியதாக கூறி, அடையாள திருட்டு என சந்தேகிக்கப்படும் மூன்று வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.
இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) பிற்பகல் 2 மணி நிலவரப்படி, பொதுமக்களிடமிருந்து இதுபோன்ற மூன்று புகார்கள் காவல்துறைக்கு வந்துள்ளன என்று கெடா காவல்துறைத் தலைவர், ஆணையர் டத்தோ பிசோல் சாலே கூறினார்.
“முதல் வழக்கில், கூலிமில் உள்ள ஒரு பள்ளியில் காலை 8.50 மணியளவில் ஒரு பெண் வாக்களிக்க வந்தார், ஆனால் அவர் ஏற்கனவே வாக்களித்ததாகக் கூறப்பட்டது.
“பொறுப்பற்ற நபர்களால் தனது பெயர் திருடப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக அவர் நம்பினார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது வழக்கும் கூலிமில் ஒரு ஆண் வாக்காளர் சம்பந்தப்பட்டது, மூன்றாவது, கோலா மூடாவில் மற்றொரு பெண் சம்பந்தப்பட்டது என்று பிசோல் கூறினார்.
தேர்தல் குற்றச் சட்டம் 1954ன் கீழ் இந்த புகார்கள் விசாரிக்கப்படும் என்று பிசோல் மேலும் தெரிவித்தார்.