கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 19 :
கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட்டு 17) நடந்த மோசமான விமான விபத்தில் உயிரிழந்த விமானி ஷாருல் கமால் ரொஸ்லான் (Shahrul Kamal Roslan) தன் தாயாரிடம் கூறிய இறுதி வார்த்தைகள் தொடர்ந்து நினைவுக்கு வருவதாக அவரது தாயார் கூறினார்.
“அம்மா, உங்கள் மீது நான் அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறேன்” என அவர் தாயாரிடம் கூறியிருக்கிறார்.
“அவனுக்கு உலகமே அம்மாதான். நான் சிகிச்சை பெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் அவனுடன் இறுதியாகத் தொலைப்பேசியின் மூலம் பேசியிருந்தேன். என் மீது அன்பு வைத்திருப்பதாகச் சொன்னான்,” என ஷாருலின் தாயார் கூறினார்.
ஷாருல் கமாலுக்குத் திருமணமாகி 3 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட 4 மகன்கள் உள்ளனர் என்றும், மகனின் இழப்பை மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.