அலோர் ஸ்டார்;
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய தின சின்னம் மற்றும் கருப்பொருளை கெடா அரசு பயன்படுத்தும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் கூறினார்.
“திரெங்கானுவைப் போலவே நாங்கள் மத்திய அரசைப் பின்பற்றுவோம், அதுதான் எங்கள் நிலைப்பாடு. இதனால் எந்த பிரச்சனையும் இல்லை.
எந்தக் கருப்பொருளைப் பயன்படுத்தினாலும் அது அரசியல் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்காது. மாறாக தேசப்பற்றையே தூண்டும் என்று, இன்று விஸ்மா தாருல் அமானில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
மேலும் “தேசிய அளவில் கொண்டாட்டம் நடத்தப்படுவதால், கெடா மாநிலம் எந்த ஆடசேபனையும் தெரிவிக்காது என்றார்.
முன்னதாக பெரிகாத்தான் நேஷனல் நிர்வாகத்தின் கீழ் உள்ள நான்கு மாநிலங்கள் வெவ்வேறு தேசிய தின சின்னத்தையும் கருப்பொருளையும் மாநில அளவிலான கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று அதன் இளைஞர் தலைவர் அஹ்மட் ஃபத்லி ஷாரி முன்மொழிந்தார்.
ஆனாலும் கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் அதே சின்னத்தையும் கருப்பொருளையும் பயன்படுத்த ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தற்போது கெடாவும் அவற்றுடன் இணைந்துள்ளது.
ஆனால் பெர்லிஸ் அரசாங்கம் மத்திய அரசின் கருப்பொருளை ஏற்றுக் கொண்டாலும் சின்னத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.