ஜப்பானில் ஃபுகுஷிமா கதிரியக்க நீர் கடலில் கலக்கும் நிலையில், தெற்கு துறைமுகப் பகுதியில், மீன்களின் ஏலம் ஏற்றம் – இறக்கத்துடன் இருந்தது. மக்கள் கடல் உணவுகளை வாங்குவதற்கு அஞ்சுவார்களோ என்பதால், மீன்களை ஏலம் எடுப்பவர்களுக்கு ஒரு நிலையற்ற விற்பனை வாய்ப்பு இருப்பதாகவே கருதப்பட்டது.
கடந்த 2011-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஃபுகுஷிமா அணு மின் நிலையத்துக்குள் கடல் நீா் புகுந்தது. இதனால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அணு உலைகளை குளிர்விக்கும் இயக்கம் நின்று போனது. அதையடுத்து, அந்த மின் நிலையத்தின் 3 அணு உலைகள் உருகின. அதிலிருந்த கதிரியக்க எரிபொருள்கள் கடலில் கலந்தன.
அதையடுத்து, ஜப்பானிலிருந்து கடல் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த விபத்துக்குப் பிறகு அணு உலைகளிலிருந்து கதிரியக்க நீா் வெளியேறியது. அதனை பெரிய தொட்டிகளில் அதிகாரிகள் தேக்கி வைத்தனா்.
தற்போது சுத்திகரிக்கப்பட்ட அந்த நீரை கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்த நிலையில், ஜப்பான் சென்று அந்த நீரை ஆய்வு செய்த ஐ.நா. அணுசக்தி பாதுகாப்பு அமைப்பின் நிபுணா்கள், அதனை கடலில் கலப்பது பாதுகாப்பானதுதான் என்று கூறினா்.
எனினும், ஃபுகுஷிமா அணு உலை நீரை கடலில் கலப்பதற்கு சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் எதிா்ப்பு தெரிவித்திருந்தன. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஃபுகுஷிமா அணு உலையில் தேக்கி வைக்கப்பட்ட கதிரியக்க நீரை சுத்திகரிக்கப்பட்டு கடலில் வெளியேற்றும் பணி கடந்த வியாழக்கிழமை காலை தொடங்கியுள்ளது.
அந்த நீரைக் கடலில் கலந்தால், ஜப்பானின் கடல் உணவுகளுக்கு தடை விதிக்கப்போவதாக சீனா மற்றும் ஹாங்காங் அரசுகள் அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.