காஜாங்:
தாமான் மேகாவில் உள்ள ஒரு இரட்டை மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இந்தோனேசிய தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று சனிக்கிழமை (செப். 2) அதிகாலை 2.13 மணிக்கு சம்பவம் தொடர்பில் அழைப்பு வந்ததும், தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு உடனே அனுப்பப்பட்டது என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் வான் எம்.டி ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
வீட்டின் படிக்கட்டுகளுக்கு அடியில் இருந்த மின்சாதனங்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும், வீட்டின் கீழ் தளத்தின் 3 விழுக்காடு எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
“50 வயதுடைய இந்தோனேசிய ஆணும், 40 வயதுடைய அவரது மனைவியும் தீக்காயங்களுக்கு ஆளானார்கள், அத்தோடு வீட்டில் ஏற்பட்ட புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மற்றொரு ஆண் சில காயங்களுக்கு உள்ளானதுடன் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய நாங்கள் மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்று வான் எம்டி ரசாலி மேலும் கூறினார்.