கோலாலம்பூர்: போலீஸ் பயிற்சி மையத்திற்கு (புலாபோல்) அருகில் உள்ள ஜாலான் சுல்தான் யஹ்யா பெட்ரா என்ற இடத்தில் நடந்த விபத்தில் 32 வயது விமானப்படை வீரர் உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) காலை 7.25 மணியளவில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பாதிக்கப்பட்டவர், மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதற்கு முன்பு சமிஞ்சை விளக்கை மீறியதாக நம்பப்படுகிறது.
கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை உதவி ஆணையர் ஶ்ரீபுடீன் முகமட் சாலே கூறுகையில், புலாபோலில் இருந்து வந்து கொண்டிருந்த பாதிக்கப்பட்ட நபர், சிவப்பு விளக்கில் நிறுத்தத் தவறி, வலதுபுறம் திரும்பிக் கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதினார். மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 39 வயது பெண்மணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவர் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987இன் பிரிவு 41(1)ன் கீழ் நாங்கள் விசாரித்து வருகிறோம் என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார். உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும். மேலும் விசாரணை இன்னும் நடந்து வருகிறது.