போர்ட்டிக்சன்:
போர்ட்டிக்சனிலுள்ள ஒரு போலீஸ் நிலையத்தின் தலைவர், பெண் ஒருவரை பாலியல் ரீதியாக சீண்டியதாகவும், அவருக்கு அநாகரீகமான செய்திகளை அனுப்பியதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரை எந்த புகாரையும் காவல்துறை பெறவில்லை.
சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று ஆரம்ப விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறை தலைவர் ஐடி ஷாம் முகமட் கூறினார்.
“டிசம்பர் 25 அன்று ஒரு அரட்டைக் குழுவில் குறித்த குற்றச்சாட்டுகள் வைரலானது, அதனடிப்படையில் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில், குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், இது குறித்த காவல்நிலையத் தலைவர் மற்றும் காவல்துறையினரை இழிவுபடுத்துவதற்காக செய்யப்பட்டவை என்றும் தெரியவந்துள்ளது,” என்று அவர் இன்று புதன்கிழமை (டிசம்பர் 27) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இருப்பினும் இக்குற்றச்சாட்டு தொடர்பில் காவல்துறை உள்ளக விசாரணையை மேற்கொள்ளும் என்றும், ஏதேனும் தவறு நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐடி ஷாம் கூறினார்.
குற்றவியல் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998ன் கீழ் குறித்த செய்தியை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால், குற்றச்சாட்டுகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.