பகாங்கின் மாரானில் இன்னமும் 34 பேர் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

குவாந்தான்:

காங்கின் மாரான் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அவர்களின் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்ட 34 பேர், அங்குள்ள இரண்டு வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று நண்பகல் நிலவரப்படி, 11 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேரும், முறையே டிசம்பர் 28 மற்றும் டிசம்பர் 29 ஆம் தேதிகளில் கம்போங் பாரு பல்நோக்கு மண்டபம் மற்றும் SK செரெங்காமில் திறக்கப்பட்டுள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில குடிமைத் தற்காப்புப் படை (APM) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கடந்த வாரம் பகாங்கில் வெள்ளம் மோசமாக பாதித்திருந்த நிலையில், ஆறு மாவட்டங்களில் இருந்து சுமார் 700 பேர் அவரவரது வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தனர். அவர்களில் 90 விழுக்காடு மக்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டு, பல தற்காலிக நிவாரண மையங்களும் மூடப்பட்டன.

தற்போது பகாங்கில் மாரான் மாவட்டம் மட்டுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here