கோலாலம்பூர் :
பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ என்கே கூ ஹாமின் வீடு மற்றும் காரிற்கு பெட்ரோல் குண்டுவீசி எரிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை போலீசார் இன்று ஷா ஆலாமில் கைது செய்தனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் சிலாங்கூரில் உள்ள ஷா ஆலாமைச் சுற்றியுள்ள பகுதியில் 30 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்றும், அவரிடமிருந்து இரண்டு கைத்தொலைபேசிகள் கைப்பற்றப் பட்டதாகவும் பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறினார்.
குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றார்.
“இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 435 இன் படி விசாரிக்கப்படுகிறது, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை அதிகாரி, துணை கண்காணிப்பாளர் முகமட் அசலான் அப்துல் கரீமை 019-3927837 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, விசாரணைக்கு உதவுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது என்றார்.







