கோத்தா திங்கி:
ஜாலான் பெசார் ஃபெல்டா ஆயிர் தாவார் 1ல் இன்று காலை நடந்த விபத்தில் ஆசிரியர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
காலை 6.49 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதும், கோத்தா திங்கி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தையச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர் என்று, கோத்தா திங்கி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், முகமட் ஷவாலுதீன் அமி நோர்டின் கூறினார்.
தமது குழு அந்த இடத்திற்கு வந்தபோது, ஒரு பெரோடுவா மைவி மற்றும் புரோத்தோன் ஜெனரல் 2 ஆகிய இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டது என்றார்.
“பாதிக்கப்பட்ட அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மலேசிய சுகாதார அமைச்சகத்தின் மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களின் சடலங்கள் மேலதிக நடவடிக்கைக்காக கோத்தா திங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.









