குவாந்தான்:
தெலுக் செம்பெடாக் என்ற இடத்தில் உள்ள தெலுக் தோங்காங் கடற்கரைக்கு அருகில் உள்ள பாறைப் பகுதியில் இருந்து, தனது சகோதரிக்கு வீடியோ அழைப்பு மேற்கொண்டபோது, கடலில் தவறி விழுந்து காணாமல் போன நேபாள நாட்டு ஆடவரின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது.
22 வயதான கணேஷ் ராணாவின் சடலம், அவர் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 18 கிமீ தொலைவில் உள்ள பந்தாய் செபாட்டில் இன்று காலை 7.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது என்று, பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி, சுல்ஃபாட்லி ஜகாரியா கூறினார்.
“கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 12) தெலுக் தோங்காங் கடலில் ஆடவர் ஒருவர் விழுந்து காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஒரு தொழிற்சாலை ஊழியரான கணேஷ் சில நண்பர்களுடன் கடற்கரைக்கு சென்று பாறைகள் நிறைந்த பகுதியில் அமர்ந்திருந்ததாகவும், மாலை 4.30 மணியளவில் தனது சகோதரிக்கு வீடியோ கால் செய்து கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்து விட்டதாகவும் கூறப்பட்டது.