சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை சுமார் 26,000 மாக உயர்ந்துள்ளது.
சிங்கப்பூரில் மே 5 – 11 இடையே 25,900-க்கும் மேற்பட்ட கொரோனா பாதித்தோர் பதிவானதில், சிங்கப்பூர் கொரோனாவின் புதிய அலையை எதிர்கொண்டுள்ளது.
இது கொரோனா கட்டுப்பாடுகளின் தொடக்கமாக பொதுமக்களை மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசாங்கத்தின் சுகாதார ஆலோசனைக்கு வித்திட்டுள்ளது.
அத்தனை எளிதில் உலகைவிட்டு கொரோனா விடை பெறாது போலிருக்கிறது. 2 ஆண்டுகளாக உலகை அலைக்கழித்த கொரோனா, தடுப்பூசிகளின் பிரவேசத்தில் ஒரு கட்டுக்குள் வந்தது. ஆனபோதும் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் சொற்ப எண்ணிக்கையில் கொரோனா தொற்று தினசரி பதிவாகி வருகிறது.
இந்நிலையில் ஒரே வாரத்தில் 26 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டதில் சிங்கப்பூர் அதிர்ச்சி தந்துள்ளது. அதிலும் முந்தைய வாரத்தின் 13,700 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, தற்போதைய 90 சதவீதம் அதிகரிப்பு சிங்கப்பூருக்கு கவலை தந்துள்ளது.
மேலும் சராசரியாக தினசரி கொரோனா பாதிப்பு கண்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, 181 என்ற எண்ணிக்கையிலிருந்து 250ஆக உயர்ந்துள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய அலையின் தொடக்கத்தில் சிங்கப்பூர் சிக்கி இருப்பதாகவும், வரும் நாட்களில் அது சீராக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் அடுத்த 2 முதல் 4 வாரங்களில்; அதாவது ஜூன் நடுப்பகுதி மற்றும் இறுதிக்குள் கொரோனா அலை உச்சத்தை எட்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
இதனையடுத்து அதிகரிக்கும் நோயாளிகளை எதிர்கொள்ளும் வகையில் கூடுதல் மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்குவது, மருத்துவமனைகளின் சுமையைக் குறைக்க வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வழிகாட்டுவது, அப்பணிகளை ஒருங்கிணப்பதற்கான மொபைல் மருத்துவ ஆலோசனைகள், மக்களிடையே கூடுதல் தடுப்பூசி டோஸ்களை வலியுறுத்துவது உள்ளிட்ட முன்னேற்பாடுகளை சுகாதார அமைச்சகம் முன்னெடுத்துள்ளது.
மேலும் வேகமெடுக்கும் கொரோனா திரிபுகளில் கேபி.1 மற்றும் கேபி.2 ஆகியவை சிங்கப்பூரில் மூன்றில் இரண்டு பாதிப்புகளாக கண்டறியப்பட்டுள்ளன.