பினாங்கு இந்து அறப்பணி வாரியம் முதன்முறையாக சிறுநீரக நோயாளிகளுக்கு உதவும் வகையில் சிறுநீரக சுத்திகரிப்பு உதவி நிதித் திட்டத்தை அறிவித்துள்ளது என்று அதன் துணைத்தலைவரும் சுகாதாரப் பிரிவுத் தலைவருமான மேலவை உறுப்பினர் டாக்டர் ஆர். ஏ. லிங்கேஸ்வரன் தெரிவித்தார். இந்தத் திட்டம் பினாங்கு மாநில இந்துக்களுக்காகத் தொடங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பினாங்கில் பிறந்தவராகவோ பினாங்கில் பதிவு செய்யப்பட்ட வாக்காளராகவோ அல்லது பினாங்கில் வசிப்பவர்களாகவோ இருக்க வேண்டும். 18 வயதுக்குட்பட்ட நோயாளிகளுக்கு பெற்றோர் பினாங்கின் பதிவுபெற்ற வாக்காளர்களாக இருப்பது அவசியம்.

சிறுநீரக நோய்க்கான சிறுநீரகச் சுத்திகரிப்பைச் செய்துகொள்ளும் நோயாளிகளின் சிகிச்சைக் கட்டணத்தின் ஒரு பகுதியாக இந்நிதி வழங்கப்படும். பி40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்கான மாற்று நிதி உதவிகள் ஏதும் இல்லாதவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். எனவே தேவையுள்ள இந்துக்களுக்கு உதவும் வகையில் இந்த நிதி உதவி அளிக்கப்படவுள்ளது. தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த சிறுநீரக சுத்திகரிப்பு உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். விண்ணப்பத்திற்கான இறுதி நாள் 15.6.2024 ஆகும்.

ஆகவே உதவி தேவைப்படுவோர் விரைந்து இந்து அறப்பணி வாரிய இணைய தளத்திலுள்ள விண்ணப்பப் படிவங்களைப் பயன்படுத்தியோ கியூஆர் கோட்டைப் பயன்படுத்தியோ விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று லிங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
செய்தி, படங்கள்: கவின்மலர்










