சென்னை:
மறைந்த கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற்ற விழாவில் கலைஞர் நாணயம் வெளியிடப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில், கலைஞர் நாணயத்தை ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
தமிழ்நாட்டின் முதல்வராக ஐந்து முறையும் 13 முறை சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினராகவும் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கடந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி முதல் ஓராண்டுக்குக் கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயத்தை தமிழக அரசு வெளியிட ஒன்றிய அரசும் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.









