கோலாலம்பூர்:
அன்வாரின் அரசாங்கத்தில் அம்னோ ஓர் இணைப்பு கட்சியாக இருந்தால் மட்டும் போதாது. மாறாக 2026 ஆம் ஆண்டுக்குள்ளாக அரசாங்கத்தில் அம்னோ அதன் ஆதிக்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று கட்சி இளைஞர் அணியின் தேசியத் தலைவர் டாக்டர் முகமட் அக்மால் சாலே இன்று வலியுறுத்தினார்.
இந்த நிலையை எட்டுவதற்கு இளைஞர் அணி பேராளர்கள் 2026 ஆம் நடைபெற உள்ள 16 ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கடுமையாக பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ தொடர்ந்து ஒரு துணை கட்சியாக இருக்கக் கூடாது. தேசிய அரசியல் நீரோட்டத்தில் அம்னோ ஆதிக்கம் மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டும்.
இதற்கு நாடாளுமன்ற மக்களவையில் அம்னோ உறுப்பினர் பலம் 2026 இல் மூன்றில் இரண்டு மடங்காக இருக்க வேண்டும் என்று அக்மால் அறைகூவல் விடுத்தார்.
கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப மையத்தில் அம்னோ இளைஞர் அணியின் பேராளர் பேரவையில் டாக்டர் அக்மால் தலைமை உரை நிகழ்த்தினார்.







