தெலுக் இந்தான்:
கம்போங் அயிர் ஈத்தாம் அருகே உள்ள ஜாலான் தெலுக் இந்தான்-பீடோர் என்ற இடத்தில், லோரி ஒன்று, மண் ஏற்றிச் சென்ற மற்றொரு லோரியுடன் விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவர் உயிரிழந்தார், அவரது மகன் காயமடைந்தார்.
உயிரிழந்தவர் யாப் சோ சூ, 74 என்றும், அவரது மகனான லோரி ஓட்டுநர், ஓங் கோக் லியோங், 43, என்றும் அடையாளம் காணப்பட்டார்.
இன்று பிற்பகல் 4.02 மணியளவில் அவசர அழைப்பு வந்ததையடுத்து ஆயிர் தவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று, பேராக் ஜேபிபிஎம் செயல்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர் சபரோட்ஸி நோர் அமாட் கூறினார்.
“சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தபோது, ஒரு லோரி, மண் ஏற்றிச் சென்ற மற்றுமொரு லோரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் ஒரு பெண் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரி உறுதிசெய்த பின்னர், அவரது உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
“காயமடைந்த ஆண் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.










