10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.. காவல் நிலையத்துக்கு தீ வைப்பு – மேற்கு வங்க கொடூரம்

மேற்கு வங்கத்தில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்கானாஸ் மாவட்டத்தில் ஜாய் நகர் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை டியூஷன் சென்றுவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் காணாமல் போனதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

பின்னர் தேடுதலில் இறங்கிய கிராமத்தினரால் குளத்தில் இருந்து சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிறுமி வீட்டுக்கு வரும் வழியில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லபட்டதாக பெற்றோரும் ஊராரும் தெரிவிக்கின்றனர். சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

பெற்றோர் புகாரின் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமியைக் காப்பாற்றி இருக்கலாம் எனவும் வேண்டுமென்றே அவர்கள் காலதாமதம் செய்ததாகவும் குற்றம் சாட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிலரால் காவல் நிலையத்திற்கும், அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை   போலீஸார்  கலைத்தனர்.

இதற்கிடையில் சிறுமி கொலை தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் ஒரு நபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கொலையாளி சிறுமிக்கு ஐஸ் க்ரீம் வாங்கிக்கொடுத்து சைக்கிளில் கடத்தியிருக்கலாம் என்று போலீஸார்  சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் கிடைத்துள்ளது.

இதற்கிடையில் இந்த சம்பவத்தில் குற்றவாளிக்கு 3 மாதங்களுக்குள் தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார். மேற்கு வங்கம் நாட்டின் வன்கொடுமை தலைநகரமாக மாறியுள்ளதாக பாஜக அமைச்சர் சுகந்தா மஜூம்தார் விமர்சித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here