தங்கள் பெயரில் சொத்தை எழுதி வைக்கக்கோரி தந்தை தாயை பிள்ளைகள் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். இதனால் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருவரும் குதித்து தற்கொலை செய்துள்ளனர். அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பேப்பரில் எழுதி வீட்டின் சுவரில் ஒட்டிவைத்துள்ளனர்.
அதில், ‘மகன்கள், மகள்கள் என நால்வரும் சேர்ந்து சொத்துக்காக எங்களைத் துன்புறுத்துகின்றனர். எங்களைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். எங்களுக்கு போதுமான உணவு அளிப்பதில்லை. இதுகுறித்து கேட்டதற்கு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் பிச்சையெடுக்க சொல்கினறனர்’ என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும் மகன்கள், தாய் தந்தையை அடித்துத் துன்புறுத்தியதாகவும், அதை யாரிடமாவது சொன்னால் தூக்கத்திலேயே கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியதாக அந்த தற்கொலை கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. வீட்டின் தண்ணீர் தொட்டியிலிருந்து இருவரின் உடல்களையும் மீட்ட போலீஸார் தற்கொலை கடிதத்தை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே கடந்த திங்கள்கிழமை அன்று உயிரிழந்தவர்களின் மகன்களில் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் ‘தற்கொலை செய்துகொண்டு பழியை எங்கள் மீது போட்டுவிடுவோம்’ என்று தங்களை மிரட்டுவதாகத் தாய் தந்தை மீது புகார் கொடுத்திருக்கிறார்.










