‘இந்திய திரைப்படங்களை ரசித்து பார்க்கும் ரஷ்ய மக்கள்’

மாஸ்கோ: “உக்ரைனில் நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான காலக்கெடுவை குறிப்பிடுவது கடினம்,” என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு, ‘பிரிக்ஸ்’ என்றழைக்கப்படுகிறது.

இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ரஷ்யாவின் கசான் நகரில் வரும் 22 – 23ல் நடக்கிறது. இதில், பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி:

இந்திய பிரதமர் மோடி என் நண்பர்; சமீபத்தில் அவரை சந்தித்த போது, ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார். மோடியின் அக்கறைக்கு ரஷ்யா நன்றி தெரிவிக்கிறது.

ரஷ்யாவில் இந்திய திரைப்படங்களுக்கு நல்ல மவுசு இருக்கிறது. பிரதமர் மோடியை சந்திக்கும் போது, இந்திய திரைப்படங்களுக்கு ஊக்கமளிப்பது குறித்து பேசுவேன்.

உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான காலக்கெடுவை குறிப்பிடுவது கடினம்.

அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு எங்களை போரில் தள்ளியது. எங்களுக்கு எதிராக இந்தப் போரை நடத்துவதில் நேட்டோ சோர்வடையும்.

போரில் எங்களது கை ஓங்கி இருக்கிறது; நாங்கள் வெற்றி பெறுவோம்; சமாதான பேச்சை நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அந்த முயற்சிகளில் இருந்து உக்ரைன் பின்வாங்குகிறது.

‘பிரிக்ஸ்’ என்பது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல. இந்திய பிரதமர் மோடி கூறியது போல், இது மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதித்துவம் இல்லாத ஓர் அமைப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here