மின்விநியோகம் முடங்கியதால் கும்மிருட்டில் மூழ்கிய நாடு

ஹவானா: கியூபாவின் மின்விநியோகக் கட்டமைப்பு சனிக்கிழமை (அக்டோபர் 19) காலை மீண்டும் முடங்கியது.

மின்விநியோகச் சேவையை மீண்டும் ஏற்படுத்தித் தரத் தொடங்கியதாக அதிகாரிகள் அறிவித்திருந்த சில மணி நேரத்தில் நாடு முழுவதும் இரண்டாவது முறையாக கும்மிருட்டில் மூழ்கியது.

தேசிய மின்சக்தி அமைப்பின் தொடர்பு ஒட்டுமொத்தமாக துண்டிக்கப்பட்டதாக கியூபாவின் மின்விநியோகக் கட்டமைப்பு நடத்துநரான UNE காலை 6.15 மணிக்கு கூறியதை அரசாங்க ஊடகத் தளமான ‘கியூபாடிபேட்’ மேற்கோள்காட்டியது.

“மின்விநியோகச் சேவையை மீட்டெடுக்க மின்சாரத் தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது,” என்றது அச்செய்தி.

கியூபாவின் ஆகப்பெரிய மின் உற்பத்தி ஆலை செயலிழந்ததைத் தொடர்ந்து, அத்தீவின் மின்விநியோகக் கட்டமைப்பு வெள்ளிக்கிழமை நண்பகல்வாக்கில் முதலில் முடங்கியது. இதனால், 10 மில்லியனுக்கும் அதிகமானோர் மின்சார வசதியின்றித் தவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here