ஒசாக்கா:
ஜப்பானிய ரயில்வே நிறுவனமான ‘JR West’, ரயிலில் பயணிக்கும் பயணிகளையும் ரயில் சிப்பந்திகளையும் கத்திக்குத்துத் தாக்குதலிலிருந்து தற்காக்கும் ஒரு புதிய குடையை வடிவமைத்துள்ளது.

நவம்பர் மாதத்திலிருந்து கிங்கி வட்டாரத்தில் அறிமுகமாகும் இந்தக்குடை கிட்டத்தட்ட 600 ரயில்களில் வைக்கப்போவதாக அந்நிறுவனம் கூறியது. ஒவ்வொரு ரயிலிலும் சிப்பந்திகள் பகுதியில் இரண்டு குடைகள் இருக்கும். அத்தோடு ஒவ்வொரு குடையும் ஒரு மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. விரித்தால் அதன் விட்டம் 1.1 மீட்டர் இருக்கும். அது கத்தி, பிளேடு போன்ற கூரான ஆயுதங்களால் கிழிக்கமுடியாத பொருளில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை விரித்துப் பிடித்தால், பிடித்திருப்பவர் கத்திக்குத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
குடையின் எடை கிட்டத்தட்ட 700 கிராம் இருக்கும் என்றும்,இது இரும்புக் கவசங்கள் போன்ற இதர பாதுகாப்புக் கருவிகளைவிட எடை குறைவானது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வலை போன்ற பொருளில் தயாரிக்கப்பட்டிருப்பதால் இந்தக் குடையைப் பிடித்திருப்பவர் தாக்குதல்காரரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க இயலும்.
ஜேஆர் கன்சாய் விமான நிலையப் பாதையில் சேவை வழங்கும் ரயிலில் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் தாக்குதல்காரர் ஒருவர், இரண்டு பயணிகள் உட்பட மூவரைக் கத்தியால் குத்தியதை அடுத்து, ரயில் நிறுவனம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
கத்திக்குத்திலிருந்து பாதுகாக்கும் கவசங்கள், அங்கிகள், கையுறைகள் போன்ற கருவிகளை அது ரயில்களில் வைத்துள்ளது. இந்த வரிசையில் தற்போது புதிய குடையும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.









