மூவார்:
19 மாத ஆண் குழந்தையை அலட்சியப்படுத்தி, காயம் ஏற்படுத்தியதாக, குழந்தை பராமரிப்பாளர் ஒருவருக்கு எதிராக இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
50 வயதான டான் கெக் சின், என்ற குறித்த குழந்தை பராமரிப்பாளருக்கு எதிரான குற்றச்சாட்டு, நீதிபதி நாரிமன் பதுருதின் முன்நிலையில் வாசிக்கப்பட்டபோது, அவர் அதனை மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த அக்டோபர் 31 அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தாமான் பாகோ ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் அந்த ஆண் குழந்தையை காயப்படுத்தியதாக டான் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவருக்கு எதிராக குழந்தைச் சட்டத்தின் பிரிவு 31(1)(a) இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது RM50,000 அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், குழந்தையை அந்தப் பராமரிப்பாளரிடம் இருந்து எடுத்து வந்தபோது குழந்தையின் வலது கண் வீங்கியிருப்பதையும், இரு காதுகளிலும் காயங்கள் இருந்ததையும் கண்டனர்.
பின்னர் பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது தொடர்பில் குழந்தை பராமரிப்பாளரிடம் வினவியபோது, தனது மேற்பார்வையில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது குழந்தை விழுந்ததாக டான் கூறினார்.
குழந்தை ஒரு நாற்காலியின் மீது ஏறி அதிலிருந்து குதித்து, மேசையில் தலையைத் தாக்கியதாக அவர் கூறினார்.
இவ்வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு தனிநபர் உத்தரவாதத்துடன் RM7,000 ஜாமீனை வழங்கிய நீதிமன்றம், வழக்கை மீண்டும் செவிமடுக்க ஜனவரி 7 ஆம் தேதியை நிர்ணயித்தது.









